திருப்பூரில் திமுக பிரமுகர், மனைவி, மகன் அடித்துக்கொலை; மகள் படுகாயம்: கொலையாளி தப்பி ஓட்டம்
திருப்பூர்; திருப்பூரில் தி.மு.க. கிளைச் செயலாளர், அவரது மனைவி, மகன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த மகள், மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இக்கொடூர கொலைகளை நிகழ்த்திவிட்டு மாயமான லாரி டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 3 வது வார்டு செட்டிபாளையம் திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தவர் சிவசுப்பிரமணியம் (54). இவரது மனைவி சாரதாம்பாள் (49). மகள் சோபனா (24), மகன் நவீந்திரன் (23). முதலாவது பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக நவீந்திரன் இருந்து வந்தார். மகள் சோபனாவுக்கு திருமணமாகி விட்டது. ஏழு மாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்கு தாய் வீடு வந்துள்ளார்.
சுப்ரமணியம், தனது தோட்டத்தில் இருந்து லாரி மூலம், தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இவரிடம், ஸ்டாலின் என்பவர் டிரைவராக பணியாற்றினார். நேற்றிரவு, 7:30 மணியளவில், குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த டிரைவர் ஸ்டாலின், லாரி பழுதாகியிருப்பதாகக் கூறி சுப்ரமணியத்தை அழைத்தார்.
சுப்ரமணியமும், நவீந்திரனும் அங்கு சென்றனர்.ஸ்டாலின் திடீரென கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால், திடீரென இருவரையும் தாக்கினான். பலத்த காயமடைந்த நவீந்திரனை அந்த நபர் தூக்கி அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் வீசினான். அலறல் கேட்டு, வீட்டுக்குள் இருந்த பெண்கள் இருவரும் வெளியே ஓடி வந்தனர். உடனே, சாரதாமணி அணிந்திருந்த நகையை ஸ்டாலின் பறித்தார். அதை தடுத்த இருவரையும், கம்பியால் கடுமையாக தாக்கி விட்டு தப்பினார்.
இதற்கிடையில் காயத்துடன் வெளியே ஓடி வந்த சோபனா, அருகில் உள்ள மளிகைக்கடைக்காரர் மோகன்ராஜிடம் அம்மா, அப்பா, தம்பியை டிரைவர் தாக்குவதாக கூறிவிட்டு மயங்கி விழுந்து விட்டார். அவரை மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். காயத்துடன் போராடிக் கொண்டிருந்த சுப்ரமணியம், சாரதாமணி ஆகியோரை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மேல்சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், சுப்ரமணியம் மற்றும் சாரதாமணி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய், துணை கமிஷனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்தனர். நவீந்திரனின் பிரேதத்தை கிணற்றில் இருந்து தீயணைப்பு படையினர் மீட்டனர்.
இந்த கொலை சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரைவர் ஸ்டாலின் மட்டுமே இந்த கொலையை செய்தானா? அவனுடன் வேறு யாரேனும் வந்தார்களா என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.