அடுத்து குத்கா மேட்டரில் திமுக மீது கை வைக்கலாம்.. ஸ்டாலின் அவசர ஆலோசனை
சென்னை: மூத்த வழக்கறிஞர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், உள்ளிட்டோருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
குட்கா விவகாரத்தில் திமுக உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா, குறிப்பாக தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதா, அப்படி எதையாவது செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அரசு திட்டமிட்டால், அப்போது என்ன செய்வது என்பது குறித்தெல்லாம், ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video
பின்னணி இதுதான்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும், அடுத்தகட்டமாக தமிழக அரசியல் எப்படி செல்லும் என்பது குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
உரிமை மீறல்
இது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் திமுக மேற்கொண்ட கள ஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர். சட்டசபையில் அதை கொண்டுவந்து காண்பித்தனர். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர்.
நோட்டீஸ்
அதன்படி உரிமை குழு கூட்டம் கூடியது. அதில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரினார்.
இடைக்கால தடை
மேலும் ஸ்டாலின் இதுகுறித்து தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு அக்.12 வரை தடை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.