ரஜினிகாந்த் பற்றி மீண்டும் மீண்டும் கேட்காதீங்க… பத்திரிகையாளர்களை கடுப்படித்த விஜயகாந்த்
ரஜினிகாந்த் பற்றி மீண்டும் மீண்டும் கேள்வி கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுப்படித்தார்.
நெல்லை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி கேட்காதீர்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ரசிகர்களுடனான 5 நாள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி காந்த் அரசியல் பேசினார். அந்தப் பேச்சில் அவர் நேரடியாக அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிக்காவிட்டாலும், அவர் அரசியலில் குதித்துவிட்டார் என்று அப்பட்டமாகவே தெரிந்தது.
இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலர் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பலர் எதிர்த்தும், சிலர் ஆதரித்தும் பேசி வருகின்றனர்.
ரஜினி கேள்வி
இந்நிலையில், இன்று நெல்லை சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்திடம், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்தக் கேள்வியை கேட்ட உடன் கடுப்பான விஜயகாந்த், மீண்டும் மீண்டும் ரஜினிகாந்த் குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்று கடுப்படித்தார்.
ஓபிஎஸ்ஸும் வேண்டாம்
அதே நேரத்தில், ரஜினி தனக்கு நல்ல நண்பர் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுபோன்று, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் இன்னாள் முதல்வர் ஈபிஎஸ் பற்றியும் தன்னிடம் கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன் கூட்டி சட்டசபைத் தேர்தல்
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே சட்டசபைத் தேர்தல் வரும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணம்
ஊழல் செய்தவர்கள் எல்லோருமே வெளிநாடு சென்று தஞ்சம் அடைகிறார்கள் என்று விஜயகாந்த் கூறினார். அதே நேரத்தில், தனது இரு கைகளையும் தூக்கி தன்னிடம் எந்த கறுப்புப் பணமும் இல்லை என்றும் அதனால் தனக்கு ரெய்டு பற்றி கவலை இல்லை என்றும் தெரிவித்தார்.