அரசியல் பத்தி மட்டும் கேள்வி கேட்காதீங்க ப்ளீஸ்.. செய்தியாளர்களிடம் கெஞ்சிய ரஜினிகாந்த்
எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள். ஆனால் அரசியல் பற்றி மட்டும் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். 4ம் நாளான இன்று கடலூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திர திருமண மண்டபத்தில் நடந்து வரும் ரசிகர்கள் சந்திப்பில், முதல் நாளில் கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இரண்டாவது நாளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மூன்றாவது நாளான நேற்று விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
4வது நாள்
நான்காவது நாளான இன்று கடலூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்தார். நாளையோடு முதல் கட்ட சந்திப்பு முடிவடைகிறது. 2வது கட்டமாக அடுத்த மாதம் ரஜினி ரசிகர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ்ச்சி
இந்தச் சந்திப்பின் போது, ரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். மேலும், ரசிகர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உற்சாகம்
ரசிகர்களுக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் உற்சாகம் குறையாமல் இருக்கின்றனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். ரசிகர்கள் அனைவரும் தீய பழக்கங்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசியல்
அப்போது, ரஜினியிடம் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள்; அரசியல் பற்றி மட்டும் எதையும் கேட்க வேண்டாம் என்று கூறினார்.