கலாசலா, கலாசலா, பீட்டா, பீட்டா பிஞ்ரும் பேட்டா.. ஜூலியானா புகழ் பெற்றது இப்படித்தான்!
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் புகழ் பெற்ற ஜூலியானா இப்போது விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
25 வயதாகும், ஜூலியானா ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, மெரினா கடற்கரையில் தனது தோழர், தோழிகளோடு கோஷம் போட்டு ஃபேமஸ் ஆனவர்.
அதிலும், குறிப்பாக "சின்னம்மா சின்னம்மா, ஓ.பி.எஸ்ச எங்கம்மா" என அவர் போட்ட கோஷமும், ஸ்ருதியை ஏற்றி இறக்கி அவர் கோஷமிட்டதும் சமூக வலைத்தளங்களில் அப்போது வைரலாகியிருந்தது. கலாசலா, கலாசலா சசிகலா எங்கே, காணோம், காணோம் ஓ.பி.எஸ்ச காணோம் போன்றவை இவரது பிரபல கோஷங்கள்.
கோஷங்கள்
ஓ.பன்னீர்செல்வம் அப்போது தமிழக முதல்வராக இருந்தார். போராட்டக்காரர்களை அவர் மெரினாவில் வந்து பார்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஜூலியானா இவ்வாறு கோஷமிட்டார்.
சசிகலா மீது சாடல்
அப்போது சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார். எனவே பன்னீர்செல்வத்தை போராட்டக்களம் அனுப்புமாறு வலியுறுத்தி இவ்வாறு குரலை, ஏற்றி, இறக்கி கோஷமிட்டார் ஜூலியானா.
நர்சு
ஜூலியானா நர்சாக பணியாற்றி வருகிறார். இருப்பினும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகுதான் இவர் புகழ் பெற்றார். இதைவைத்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியானா ஒரு பங்கேற்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.
வதந்திகள்
முன்னதாக, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நிறைவடையும் தருவாயில், ஜூலியானா கொலை செய்யப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் போட்டோக்கள் தீயாய் பரவின. நான் உயிரோடுதான் இருக்கிறேன் என அவரே வீடியோ காட்சி வெளியிடும் நிலை ஏற்பட்டது.
சொந்த ஊர் வேண்டாமே
'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்திற்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் தனது பெயர், ஊர் விவரத்தை வெளியிடவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊரைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேட்டி அளித்திருந்தார் ஜூலி.
வம்பாகிவிட்டது
ஜூலி பிக்பாசில் பங்கேற்க வைக்கப்பட்டதால், அவர் போன்ற இளம் போராளிகளுக்கு ஊக்கம் கிடைக்கும் என்றுதான் மக்கள் நினைத்தனர். ஆனால் நேற்று அவர் பேசிய ஒரு வார்த்தை வம்பாகிவிட்டது. சக பங்கேற்பாளரான நடிகர் ஸ்ரீ பிக்பாசில் பங்கேற்பதில் விருப்பம் இல்லாமல் இருப்பதை போல உணர்ந்த ஜூலியானா, அவரை தேற்றுவதாக நினைத்துக்கொண்டு எல்லோரையும் கட்டிப்பிடித்தனர், என்னை கட்டிப்பிடிக்கதான் ஆளில்லை. நீங்களும் போய்விட வேண்டாம் என்கிற அர்த்தத்தில் பேசினார். ஆனால், அவர் பேசிய வார்த்தை தவறானது என்பதால் இப்போது இணையத்தில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். எது எப்படியோ இனியும் சர்ச்சைக்கு இடம்தராமல் ஜூலி தனது போராட்ட குணத்தை போட்டியில் காட்ட வேண்டும் என்பதே மக்களின் ஆவல்.