ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறிக்க சசி தரப்புக்கு பயம்! ஏன் தெரியுமா?
ஓபிஎஸ் அணி எம்.எல்ஏக்களின் பதவியைப் பறித்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்று சசிகலா தரப்பினர் தயக்கம் காட்டிவருகின்றனர்.
சென்னை: முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனால் அதிமுக பன்னீர்செல்வம் அணி , சசிகலா அணி என்று இரண்டு அணிகளாக பிளவுப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாள்தோறும் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
முன்னதாக தமிழக சட்டசபையில் கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடப்பாடிக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் 122 பேர் வாக்களித்தனர் மற்றும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். மேலும் அதிமுக எம்.எல்.ஏ அருண்குமார் வாக்களிப்பை புறக்கணித்தார். இதனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தப்பியது.
அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களின் பதவியை, சட்டசபை விதிப்படி அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா ராஜேந்திரனால் பறிக்க முடியும்.
ஆனால் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் , தேவை இல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் இது திமுகவுக்கு பலமாக அமைந்துவிடும் என்றும் அதிமுக வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.
அதுமட்டுமில்லாமல், 12 எம்.எல்.ஏக்களை நீக்கினால்,அந்த தொகுதிகள் காலி இடமாக அறிவிக்கப்படும். இதனைத்தொடர்ந்து 6 மாதத்திற்குள் இடைதேர்தலை சந்திக்கநேரிடும், இதனால் அதிமுகவின் செல்வாக்கு சரிய வாய்ப்புள்ளதாக மூத்த தலைவர்கள் யோசனையில் உள்ளனர்.
மேலும் சசிகலாவுக்கு எதிராக தமிழக மக்களின் மனநிலை இருந்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சில பத்திரிக்கைகள் நடத்திய கருத்துக்கணிப்புகளும், சமூக ஊடகங்களில் பரவிய கருத்துக்களும் அமைந்துள்ளது.
ஒரு வேளை 12 அதிருப்தி எம். எல்.ஏக்கள் நீக்கம் செய்யப்பட்டால், அதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையடுவார்கள், அது மேலும் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது செல்லாது என்று பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இதற்கிடையே பன்னீர்செல்வம் தரப்பினர் செம்மலையை கொறடாவாக நியமித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதோடு, உரிய அங்கிகாரம் பெற தேர்தல் ஆணையத்தை நாட ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக அரசியல் விமர்சகரும், உதவி பேராசிரியருமான பி. ராமஜெயம் கூறுகையில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் சமபலம் வாய்ந்தவர்கள். தற்போது உள்ள சூழலில் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்களை நீக்கினால் , எதிர்வரும் இடைத்தேர்தலில் காலியாக இருக்கும் தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறுவது கடினம் என்றார். இது திமுக அல்லது பிறகட்சிகளுக்கு சாதகமாகிவிடும் என்று தெரிவித்தார்.
மேலும் அதிமுகவில் நடைபெற்றுவரும் அதிகார சண்டையினால் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே இப்போதைக்கு கமுக்கமாக இருந்து கொண்டு, ஆர்.கே. நகரில் எப்படியாவது ஜெயித்து விடுவதில் மட்டுமே கவனமாக இருக்கவும் சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளது