திருமண வாழ்க்கை தித்திக்கணுமா?: இதை 'ட்ரை' பண்ணுங்க
சென்னை: திருமண வாழ்க்கை கசப்பானதாக இருப்பதும், இனிப்பானதாக இருப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இன்று அந்த பயிர் முளைக்கத் துவங்கியதுமே கருகும் அபாயத்தில் உள்ளது. திருமணம் என்பது பலருக்கும் கசக்கும் விஷயமாகிவிட்டது. திருமணம் என்றால் ஏதோ ஆயுள் தண்டனை என்பது போன்று பலர் நினைக்கிறார்கள்.
அதற்கு காரணம் விட்டுக் கொடுத்து வாழ்வது குறைந்து வருவது தான்.
டிவி
என் மனைவி எப்பொழுது பார்த்தாலும் டிவியில் சீரியல் பார்த்து பார்த்து அழுகிறாள். சாப்பாடு கேட்டால் கூட விளம்பர இடைவேளையில் தான் தருகிறாள் என்பது பல கணவன்மார்களின் வருத்தம்.
செல்போன்
என் கணவர் எப்பொழுது பார்த்தாலும் செல்போனும் கையுமாக உள்ளார். இல்லை என்றால் லேப்டாப்போடு ஒன்றிவிடுகிறார். அந்த செல்போன், லேப்டாப்பில் என்ன கருமம் உள்ளதோ தெரியவில்லை என்பது மனைவிகளின் குமுறல்.
விட்டுக்கொடுத்தல்
கணவன் மனைவி என்று இருந்தால் தகராறு இல்லாமல் இருக்காது. அவ்வாறு சண்டை ஏற்பட்டால் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள்.
அகம்பாவம்
நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற அகம்பாவம் வேண்டாம். விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அதன் பிறகு அதன் சுகம் புரியும். இந்த நிமிடம் மட்டுமே நிஜம் என்பதை மனதில் வைத்து சகிப்புத்தன்மையோடு வாழுங்கள். வாழ்க்கை அமைதிப் பூங்காவாக இருக்கும்.
பெண்களே
பெண்களே, சீரியல்களே கதி என்று இருக்க வேண்டாம். கணவர் கையிலும் டிவி ரிமோட்டை கொடுத்து அவர் விரும்பும் நிகழ்ச்சிகளையும் பார்க்க விடுங்கள். நீங்களும் அவர் அருகில் அமர்ந்து அவருக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பாருங்கள். இப்படி செய்தால் பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.
ஆண்களே
ஆண்களே, நீங்கள் செல்போனும் கையுமாக இருங்கள். அதற்காக மனைவியிடம் இருந்து தப்பிக்கும் வழியாக செல்போனை நினைக்காதீர்கள். செல்போனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிறிது நேரம் மனைவியுடன் நேரம் செலவு செய்யுங்கள்.
பேசிப் பேசியே
மனைவியுடன் நேரம் செலவழிப்பதா? காதில் ரத்தம் வரும் அளவிற்கு பேசிப் பேசி கொல்கிறாளே என்று நினைக்காதீர்கள். உங்களை விட்டால் அவர் வேறு யாரிடம் பேச முடியும்.(மனைவி பேசுவதை கவனிக்காவிட்டாலும் அவர் அருகே அமர்ந்து கவனிப்பது போன்று நடிக்கவாவது செய்யலாமே. நீங்கள் கவனிப்பது போன்று நடித்து சிக்கினால் நாங்கள் பொறுப்பல்ல.)
நச்சரிக்காதீர்கள்
கணவன் வீட்டிற்குள் நுழைந்தால் இடைவிடாமல் பேசிப் பேசி அவரை தலைதெறித்து ஓட வைக்காதீர்கள் பெண்களே. அமைதியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். பேச்சை குறையுங்கள். பேசாமல் அமைதியாக இருப்பதிலும் நிம்மதி உள்ளது என்பதை புரிந்து கொண்டால் உங்கள் கணவருக்கு பிடித்த மனைவியாக எப்பொழுதுமே இருக்கலாம்.