அரூர் அரசு மருத்துவமனையில் அதிக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் – திட்ட இயக்குனர்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த அரூர் பேரூராட்சியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில சுகாதாரத் திட்ட இயக்குநர் எம்.எஸ்.சண்முகம், அரூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புக்கு 6 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு உள்ளது. தற்போது இந்த வார்டில் 6 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பச்சிளம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அறுவைசிகிச்சை அரங்கு, ஜெனரேட்டர் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் அரசு உதவித்தொகைகள், மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம், "அரூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர் உள்பட 6 மருத்துவர், செவிலியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். துப்புரவு பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்து சுகாதார தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தமிழக அளவில் அரூர் அரசு மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.