பெண்கள் கல்லூரிக்குள் புகுந்து 4 மாணவிகளை கடித்துக் குதறிய வெறிநாய்: பீதியில் பிற மாணவிகள்
நெல்லை: நெல்லை அருகே கல்லூரிக்குள் புகுந்த வெறிநாய் அங்கு பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவிகளை கடித்துக் குதறியதால் அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நெல்லை காநதி நகரில் செயல்படும் ராணி அண்ணா கல்லூரியில் கடந்த சில வாரங்களாக தெருக்களில் சுற்றும் நாய்கள் புகுந்து தொல்லை கொடுத்து வருகின்றன.
காவலாளியை வைத்து விரட்டினாலும் அவை வேறு வழியாக புகுந்து மாணவிகளை அச்சுறுத்தி வருகின்றன. இது குறித்து மாநராட்சி நிர்வாகத்திடம் கல்லூரி நிர்வாகம்
முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி நடந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டமாக நாய்கள் உள்ளே புகுந்தன. அதிலிருந்த ஒரு வெறி பிடித்த நாயை மாணவிகள் விரட்ட முயன்றனர். அப்போது திடீரென அது மாணவிகள் மீது பாய்ந்தது. அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் 4 மாணவிகளை அந்த நாய் அடுத்தடுத்து கடித்துக் குதறியது. இதையடுத்து கல்லூரி முதல்வர் மாணவிகளை நாய் கடித்தது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். கலெக்டர் உடனடியாக அதை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.
நாய் பிடிக்கும் வாகனத்துடன் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்தனர். கல்லூரிக்குள் புகுந்த வெறி நாயை பிடிக்க அவர்கள் விரட்டினர். அப்போது எதிர்பாராவிதமாக அந்த நாய் அவர்கள் மீதும் பாய்ந்தது. வசமாக சிக்கிய ஒரு தொழிலாளியை கடித்துக் குதறி விட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம்
நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கும், வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகளுக்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கல்லூரி வளாகம் மற்றும் காந்தி நகர் பகுதியில் வெறிநாயை தேடினர். இரவு 8 மணி வரை தேடியும் வெறி நாய் சிக்கவில்லை. இதனால் கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும் பீதியில் உள்ளனர்.