சென்னையில் பெண்ணுக்கு கத்திகுத்து.. நாய்களின் உதவியுடன் குற்றவாளியை மடக்கி பிடித்த பொதுமக்கள்
சென்னை: சென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை இரண்டு நாய்களின் உதவியுடன் பொது மக்கள் மடக்கி பிடித்தனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுனிதா(30). இவர் சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் தங்கி எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் புதன்கிழமை காலை அலுவலகம் செல்வதற்காக சுனிதா அங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர், சுனிதா வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். கத்திகுத்து காயத்துடன் சுனிதா மீண்டும் விடுதிக்கு ஓடிவந்துள்ளார். இதைபார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடிக்க முயன்றபோது கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். அந்த நேரத்தில் இதை பார்த்த வளர்ப்பு நாய்கள் இரண்டு அந்த நபரை சுற்றி வளைத்தது.
இதனால் அவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிக்க முடியாமல் போனது. அப்போது நாய்கள் உதவியுடன் அவரை ஆட்டோ டிரைவர் ராம் மடக்கி பிடித்தார். இதையடுத்து அந்த நபர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அந்த நபர் பெயர் ரகுநாத் என தெரியவந்தது. அவர் சுனிதாவுடன் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.