அதிமுகவின் முக்கிய உறுப்பினர் சசிகலா "அம்மாவை" முதல்வர் சந்தித்தது தவறுல்ல.. சொல்வது பொன்னையன்
சசிகலா "அம்மாவை" பன்னீர்செல்வம் சந்தித்தது தவறு இல்லை என்று பொன்னையன் கூறியுள்ளார். சசிகலா அதிமுகவின் முக்கிய உறுப்பினர் என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா "அம்மாவை" முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தது தவறு அல்ல; சசிகலா அதிமுகவின் முக்கியமான உறுப்பினர் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அதிமுகவின் தலைமையை ஏற்க சசிகலா வர வேண்டும் என அக்கட்சியில் குரல் எழுப்பப்படுகிறது.
அதே நேரத்தில் சசிகலா தலைமைப் பொறுப்பேற்றால் அதிமுக உடைந்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது சசிகலாவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தது தொடர்பாக கேள்விகள் எழுப்பபட்டன. இதற்கு பதிலளித்த பொன்னையன், சசிகலா அம்மாவை முதல்வர் உள்ளிட்டோர் பார்ப்பது தவறு அல்ல. அதிமுகவின் முக்கிய உறுப்பினர் சசிகலா; அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வீட்டை நினைவில்லமாக்குவது குறித்து அதிமுக முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.