மேகதாது அணை- மத்திய அரசு தடுக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம்! கர்நாடகாவுக்கு கண்டனம்!
சென்னை: மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடகாவுக்கும் அத்தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இரு இடங்களில் கர்நாடகா அணை கட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
அண்மையில் இந்த அணைகள் கட்டுவதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டையும் கர்நாடகா அரசு அறிவித்தது. கர்நாடாவின் இம்முயற்சியைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால் கர்நாடகாவில் தமிழக முதல்வர் உட்பட கட்சித் தலைவர்களின் உருவ பொம்மைகளள எரிப்போம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். அத்தீர்மான விவரம்:
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின் படி, காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை மாதாந்திர வாரியாகப் பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும்; காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதையும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் காவி நீரவாரி நிகமம் வாயிலாக மேற்கொள்ளவுள்ள திட்டங்களையும், தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்திற்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில் அணைகள் கட்டும் திட்டம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடகம் செயல்படுத்த முனையக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்; 5.12.2014 அன்று இந்த மாமன்றத்தால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவதற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 25 கோடி ரூபாயை கர்நாடக அரசு தனது நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கி உள்ளதற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
கர்நாடக அரசு, மேகதாது நீர்மின் திட்டம் மற்றும் வேறு பல திட்டங்களை எடுத்துக் கொள்வதை நிறுத்தி வைக்கும்படி கர்நாடகத்திற்கு அறிவுரை வழங்க புரட்சித் தலைவி அம்மா அன்றைய பாரத பிரதமரை 2.9.2013 அன்று கடிதம் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொண்டதற்கும்; கர்நாடக அரசு, காவிரி நீரவாரி நிகமம் என்ற அமைப்பின் மூலமாக, பல நவீனமயமாக்கும் திட்டங்களை நிறுத்தி வைக்க, கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கும்படி பாரதப் பிரதமருக்கு புரட்சித் தலைவி அம்மா 3.9.2013 அன்று கடிதம் அனுப்பினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தமிழகத்தின் அனுமதியில்லாமலும் இத்திட்டங்களை கர்நாடகம் மேற்கொள்ள தடை விதிக்க கோரியும், மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு ஏற்படும் வரையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தற்போதைய நிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு வழங்கவும் கோரி ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் ஆணையின்படி 11.4.2014 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதற்கும்;
மேகதாதுவில் புதிய அணைகள் கட்ட தொழில் நுட்ப சாத்திய அறிக்கை தயார் செய்வதற்காக கர்நாடக அரசின் விருப்பம் கோரும் அறிவிப்பை நிறுத்தி வைத்திடவும் குடிநீர் வழங்கல் என்ற போர்வையின் அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவு பெறாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கவும் பாரதப் பிரதமரை தமிழக முதல்வர் 12.11.2014 அன்று நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டதற்கும்; இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 18.11.2014 அன்று இடைக்கால மனு ஒன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தமைக்கும்; மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்காக ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கர்நாடக அரசு தனது 2015-2016 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கம் செய்ததை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல், எந்த திட்டத்தையும் கர்நாடகம் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்க 21.3.2015 அன்று தமிழக முதல்வர் பாரதப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கும்; இது தொடர்பாக 26.3.2015 அன்று மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததற்கும்;
தனது பாராட்டுதலையும், நன்றியையும் இந்த மாமான்றம் வித்துக் கொள்கிறது. மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை கர்நாடகத்தால் தயாரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்;
காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்திற்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில் அணை, நீர்த்தேக்கம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்கக் கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்;
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படி உறுப்பினர்களை பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சார்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து, இந்த தீர்மானத்தை அவரிடம் வழங்கி, தமிழகத்தின் கவலையையும் நிலைப்பாட்டையும் பாரதப் பிரதமரிடம் எடுத்துரைக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இத்தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.