Exclusive: அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் கூட்டணியாக மாற்றுகிறது திமுக: வேல்முருகன் பாய்ச்சல்
விவசாயிகளுக்கு ஆதரவாக கூடிய கட்சிகளை தேர்தல் கூட்டணியாக திமுக திசைமாற்றுகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
சென்னை : விவசாயிகளுக்காக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவது போல கூட்டிவிட்டு அதையே தேர்தல் கூட்டணியாக மாற்ற திமுக முயல்வதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாணரத் தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 35 நாட்களாகப் போராடி வருககின்றனர். ஆனால்ல் விவசாயிகள்னா யாரு என்கிற தொணியில் மத்திய மாநில அரசுகள் இதை பொருட்படுத்தாமல் அரசியல் காய்களை மட்டும் நகர்த்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து தமிழ் ஒன் இந்தியாவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பிரத்யேக பேட்டியளித்தார். அந்த நச் கேள்விகளும், நறுக் பதில்களும் இதோ:
திமுக நாடகம்
கேள்வி: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அழைப்பு வந்ததா?
பதில்: திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எந்த அழைப்பும் வரவில்லை, ஆனால் கடந்த 13-ந் தேதி அனைத்து தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் சந்தித்து 22 தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறுவதாகவும் அதற்கு ஆதரவும் கோரியிருந்தனர். அவர்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்தேன். இந்த போராட்டத்தைத் தான் திமுக தற்போது தங்கள் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டம் போல மாற்றியுள்ளது.
முந்திக் கொண்ட திமுக
கேள்வி: அனைத்துக்கட்சி கூட்டத்தில் எந்த அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்றன?
பதில்: டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு நியாயமான தீர்வை மாநில அரசு ஏற்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். ஆனால் அதிமுக அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பதால் திமுக முந்திக்கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை என்ற அடிப்படையிலேயே விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்றிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.
மக்கள் நல கூட்டியக்கத்தில் தவாக
கேள்வி: மக்கள் நலக் கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இணையுமா?
பதில்: மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக போராடும் மக்கள் நல கூட்டியக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி அங்கம் வகிக்கிறது. ஆனால் இதை தேர்தல் அணியாக கொண்டு செல்லும் வகையிலான மக்கள் நலக் கூட்டணியில் நாங்கள் இல்லை.
கூட்டணி வேண்டாம்
கேள்வி: விசிக, கம்யூனிஸ்ட் திமுகவுடன் இணையுமா?
பதில்: அனைத்துக் கட்சி கூட்ட முடிவில் கூட இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டம் விவசாயிகளுக்கான ஒன்றுகூடல் என்றும், இது தேர்தல் அணி இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளனர். இதே நிலை நீடிக்க வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன்.
திமுக வெளித்தோற்றத்திற்கு விவசாயிகள் நலனுக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினாலும், இந்த கட்சிகளை தேர்தல் வரை ஒன்றாக வைத்துக் கொள்ள திட்டமிட்டே காய் நகர்த்துவது பட்டவர்த்தனமாகியுள்ளது. இல்லையென்றால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொதுவேலைநிறுத்தம் அறிவித்துவிட்டு, முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுடன் டெல்லி செல்கிறோம், பிரதமரை சந்திக்க உள்ளோம் எனக் கூறுவது ஏன்? எனவே திமுகவின் இரட்டை வேடத்தை நம்பாமல் விடுதலை சிறுத்தைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கள் இன்னும் மக்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பதை நினைத்து செயல்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.