நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது: தினகரன் பொளேர்
சென்னை: நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது என்றும் அதிமுக தொண்டர்களை குழப்பி யாரும் ஏமாற்ற முடியாது, அப்படி செயல்பட்டால் தோல்வி அடைவார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
கட்சிக்கு துரோகம் செய்தால் அது யாராக இருந்தாலும் கட்சியைவிட்டு நீக்க பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உண்டு. யாரையும் சேர்க்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
இந்த நிலையில் கட்சி இயங்கி வருகிறது. இதில் எடப்பாடி என்னை நீக்குவதாக அறிவித்துள்ளது செல்லாது. கட்சியின் பணிகளை நான் இல்லத்தில் இருந்தே தொடருகிறேன்.
எங்கள் ஆட்சி இது
நடப்பதே எங்கள் ஆட்சி. இதில் என்ன எனக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கூறுவது? நான் தீவிரமாக அரசியலில் இறங்கியுள்ளேன்.
பதவியை காப்பாற்ற
நான் கட்சியைப் பலப்படுத்த பாடுபடுகிறேன். இவர்கள், தங்களின் பதவியையும் ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்ள செயல்படுகிறார்கள். தொண்டர்களை குழப்ப பார்க்கிறார்கள். என்ன நீக்க சசிகலாவுக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு.
பதவி வெறியர்கள்
இவர்கள் சில பேர் சொல்வதற்கெல்லாம் நான் செயல்பட முடியாது. பதவி வெறி பிடித்தவர்கள், சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது.
காளான்கள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்திற்கு எதிராக எடப்பாடி அணியினர் பேசுகிறார்கள். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் என்னை கட்சியைவிட்டு நீக்க முடியாது, ஒன்றைரை கோடி தொண்டர்கள் ஆதரவு எனக்குதான் உண்டு, இவர்கள் தோல்வியடைவார்கள்.
இவ்வாறு தினகரன் கூறினார்.