தமிழகம் ஏற்கனவே நடிகர்களால் நாசமானது போதாதா? ரஜினிக்கு எதிராக கொதிக்கும் அன்புமணி!
சென்னை: தமிழக மக்களுக்கு நடிகர் தேவையில்லை, நல்ல நிர்வாக திறமையுள்ள நபர்தான் தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், " ரஜினி என் இனிய நண்பர் . நல்ல நடிகர். அவர் நடிப்பை பார்ப்போம் ரசிப்போம். தமிழகத்திற்கு தேவை நடிகர் அல்ல. நல்ல நிர்வாக திறமையுள்ள நபர். தமிழகத்திற்கு நடிகர் வேண்டாம். டாக்டர் தான் வேண்டும். தமிழகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. கடனில் ஊழலில் தத்தளிக்கிறது. இந்தியாவில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. வேளாண்மை வளர்ச்சி எதிர்மறையாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 21வது இடத்தில் உள்ளது. 1.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அண்டை மாநிலங்களிடம் தமிழக உரிமைகளை படிப்படியாக இழக்கிறோம். இந்த நேரத்தில் நடிகர்கள் ஒன்றும் செய்திட முடியாது. கடந்த காலத்தில் தமிழகத்தை நடிகர்களிடம் ஒப்படைத்து நாசப்படுத்திவிட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற நடிகர்கள், தமிழகத்தை ஆட்சி செய்து நாசப்படுத்தினர். நடிகர்கள் தமிழகத்தை ஆண்டது போதும், நாட்டில் வேறு எங்கும் நடிகர்கள், சினிமா துறையினர் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தது இல்லை." என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அன்புமணியை ' நல்ல சிந்தனையாளர், படிப்பாளி, உலகம் முழுக்க சுற்றி வருகிறார், நல்ல விஷயங்களைச் சொல்கிறார் ' என்று பாராட்டிப் பேசிய சூழ்நிலையில் அன்புமணி மேற்கண்டவாறு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.