கீழக்கரையில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி: மயில்சாமி அண்ணைாதுரை பங்கேற்பு
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாளை முன்னிட்டு கீழக்கரையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதில் இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன் கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் மாணவ, மாணவிகளுக்கு விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. மேலும், கலாம் நினைவு அமைதி பேரணி நடந்தது. இதில் கலாம் படம் பொறிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து கொண்டு ஏராளமான, மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை தாங்கினார். இஸ்ரோ துணை இயக்குநர் டாக்டர் சர்மா, , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன் சேக் சலீம், கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி முதல்வர் சமயா உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.