பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு
சென்னை: சென்னை, பெரியார்திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் 28.02.2015 மாலை 6.30 மணிமுதல் திரையிடப்பட்டது.
சென்னையில் உள்ள பல்வேறு தமிழார்வலர்கள், இசையார்வலர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, திரையிடலின் நோக்கம் குறித்து பிரின்சு என்னாரெஸ் பெரியார் பேசினார்.
"சந்தனக்காடு" இயக்குநர் வ.கௌதமன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆவணப்படத்தின் சிறப்புகளையும், கலை நேர்த்தியையும், ஆவணப்படத்தை இயக்கிய பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனின் முயற்சியையும் பாராட்டிப் பேசினார். இந்தப் படத்தில் குடந்தை ப. சுந்தரேசனாரின் ஆன்மாவைப் பார்ப்பதாகவும், மனித நேயம் மிக்க மிகப்பெரிய மனிதராக குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்ந்துள்ளதை இந்த ஆவணப்படம் சிறப்பாக எடுத்துரைப்பதைத் தம் வாழ்த்துரையில் குறிப்பிட்டார். மேலும் காவிரியைக் காட்சிப்படுத்தியுள்ள திறம், கழிமுகப்பகுதியில் நாட்டியம் இணைத்துள்ள திறம் யாவும் நம்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுசெல்கின்றன என்று பாராட்டினார்.
நிழல் இதழின் ஆசிரியரும் குறும்படம் ஆவணப்படம் குறித்துத் தமிழகத்தில் நிறையப் பயிலரங்குகளை நடத்தி வருபவருமான ப. திருநாவுக்கரசு தமக்கும் குடந்தை ப. சுந்தரேசனாருக்கும் அமைந்த தொடர்பை எடுத்துரைத்து, அவரின் சிறப்புகளை விளக்கினார். இந்த ஆவணப்படத்தின் சிறப்புகளை விளக்கி, ஊர்தோறும் இது திரையிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.
எழுத்தாளர் கோவி. இலெனின் அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் குறித்து அண்மைக்காலத்தில்தான் அறிவேன் என்றும், தமிழிசை வரலாற்றில் குடந்தை ப.சுந்தரேசனாருக்கு உள்ள இடம் குறித்தும் அவையினருக்கு நினைவூட்டி, இந்த ஆவணப்பட உருவாக்க முயற்சியைப் பாராட்டினார்.
தமிழிசை அறிஞர் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் பண்ணாராய்ச்சி வித்தகரின் குரல்வளத்தையும், அவர்தம் பாடுமுறைகளையும் வியந்து பேசினார். சிலப்பதிகாரத்தைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியுள்ள திறம் போற்றினார். தமிழிசை அறிஞர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்குநர் இதுபோல் தமிழிசைக்குப் பாடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி வழங்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். தமிழிசை உள்ள வரை இந்த ஆவணப்படம் பேசப்படும் என்று தம் பாராட்டைத் தெரிவித்தார்.
ஆவணப்படத்தை இயக்கிய மு.இளங்கோவன் ஆவணப்படம் உருவான வரலாற்றையும், அதில் தமக்கு ஏற்பட்ட பட்டறிவுகளையும் அவையினரிடம் பகிர்ந்துகொண்டார். மேலும் தமிழிசைக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து ஆவணப்படுத்த உள்ளமையை அவையினருக்குத் தெரிவித்தார். அந்த வரிசையில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் வாழ்க்கையும், பணிகளும் ஆவணப்படுத்தப்பட உள்ளமையை எடுத்துரைத்தார்.
நிறைவில் ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.