ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏவாக மதுரை டாக்டர் நான்சி சிந்தியா நியமனம்
சென்னை: 15வது சட்டசபையின் நியமன உறுப்பினராக டாக்டர் நான்சி ஆன் சிந்தியாவை ஆளுநர் ரோசய்யா நியமித்துள்ளார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த நியமனத்தை ஆளுநர் அறிவித்துள்ளார்.
டாக்டர் நான்சி மதுரையில் வசித்து வருகிறார். அவர் எம்.பி.பி.எஸ் டாக்டர் ஆவார். 1955ம் ஆண்டு மே 4ம் தேதி அவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தார். ஆங்கிலோ இந்தியர் ஆவார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியில் வசித்து வரும் இவர் அகில இந்திய ஆங்கிலோ இந்தியர்கள் சங்கத்தின் மதுரை கிளைத் தலைவராக இருக்கிறார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழக சட்டசபையில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களுக்கான நியமன உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 15வது தமிழக சட்டசபையின் ஆயுள் காலம் வரை நான்சி உறுப்பினராக இருப்பார். சபைக் கூட்டங்களில் இவர் கலந்து கொள்ளலாம். அதேசமயம் இவருக்கு ஓட்டுரிமை கிடையாது.