நிலம் கையகப்படுத்தும் சட்டம்- மத்திய அரசின் விபரீத முடிவுக்கு அதிமுக துணை போவதா?: தி.க
சென்னை: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்துதல் சட்டதிருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளிப்பது கண்டிக்கத் தக்கது என திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
அவற்றின் விபரமாவது:-
இன்றைய மத்திய அரசு விவசாய வளர்ச்சிபற்றிச் சிறிதும் அக்கறை செலுத்தாததோடு, விவசாயப் பெருநாடான இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக விவசாய நிலங்களையே தங்கள் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் மக்களின் நிலங்களை, பெருமுதலாளிகளாகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையில், தான்தோன்றித்தனமாக - அத்துமீறல் என்று சொல்லத்தக்கவண்ணம் கையகப்படுத்துவதற்கு இச்செயற்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இல்லையேல், கட்சிகளைக் கடந்து ஓரணியில் திரண்டு வெற்றி கிட்டும்வரை போராடவேண்டும் என்று இச்செயற்குழு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது. மத்திய அரசின் இந்த விபரீத முடிவுக்கு அ.இ.அ.தி.மு.க. அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.