மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல்- 4 பேர் கைது
தூத்தக்குடி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த சரக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கக் கட்டியை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தங்கத்தை கடத்திய தொடர்பாக நால்வரை கைது செய்துள்ளனர்.
மலேசியா தலைநகர் கோலாலம் பூரில் இருந்து எம்.வி.கேப் நெமோ என்ற சரக்கு பெட்டக கப்பல் புதன்கிழமையன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. துறைமுகத்தில் உள்ள பி.எஸ்.ஏ. சிகால் சரக்கு பெட்டக முனையத்தில் நிறுத்தப்பட்ட அந்த கப்பலில் இருந்து சரக்கு பெட்டகங்களை இறக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.
இக்கப்பலில் தங்கக் கட்டிகள் பெருமளவில் கடத்தி வரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் இணை ஆணையர் பாரிவள்ளல் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமையன்று இரவு 7 மணியளவில் அந்த கப்பலில் வந்த சரக்குப் பெட்டகங்களை சோதனை செய்தனர்.
வீட்டு உபயோகப் பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த ஒரு பெட்டகத்தில் சலவைத்தூள் பாக்கெட்டுகளுக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் 12 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு அடையாளங்களை கொண்ட அந்த தங்கக் கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.3.43 கோடி.
கப்பலின் முகவர் செல்வம் என்பவரைப் பிடித்து, மத்திய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை சேர்ந்த செல்வராஜ் என்பவரது பெயரில் இந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்வராஜ், கடத்தலி்ல் தொடர்புடைய ஏர்வாடியை சேர்ந்த முகமது ரபீக், ராஜூ, ரகுமத் உள்ளி்ட்ட 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.