தங்க கடத்தலில் குட்லக் ராஜேந்திரனுக்கு உடந்தை? விசாரணை வளையத்தில் தமிழக காங். அதிமுக்கிய தலைவர்!
தங்க கடத்தலில் சிக்கிய குட்லக் ராஜேந்திரனுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிமுக்கிய தலைவர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய குட்லக் ராஜேந்திரனுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழக காங்கிரஸ் கட்சியின் அதி முக்கிய தலைவரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து 12 கிலோ தங்கம் கடத்திய ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குட்லக் ராஜேந்திரனை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குட்லக் ராஜேந்திரன் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குட்லக் ராஜேந்திரன் ஏற்கனவே காபிபோசா வழக்கில் சிறையில் இருந்தவராம். குட்லக் ராஜேந்திரனின் மனைவியும் காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைவாசத்தை அனுபவிக்காமல் வேறு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து 'ஆள்மாறாட்டம்' செய்தார் என்ற சர்ச்சையும் உண்டு.
அதிமுக்கிய தலைவர்
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிமுக்கிய தலைவர் ஒருவர் குட்லக் ராஜேந்திரனின் கூட்டாளியாக செயல்பட்டிருப்பதையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்த அதிமுக்கிய தலைவரின் சென்னை வீட்டுக்கு ரூ5 கோடி முன்பணம் கொடுத்தவராம் குட்லக் ராஜேந்திரன்.
பத்திரிகை...
அந்த அதிமுக்கிய தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகமே குட்லக் ராஜேந்திரனுக்கு சொந்தமானதாம்.
விசாரணை வளையத்தில்...
அத்துடன் குட்லக் ராஜேந்திரனின் சட்டவிரோத பணபரிவர்த்தனைக்காகவே பாங்காங்கில் பணப் பரிமாற்ற மையம் ஒன்றை 3 ஆண்டுகளுக்கு முன்னர் திறந்துவைத்தாராம் அந்த அதிமுக்கிய தலைவர். நீண்டகாலமாகவே குட்லக் ராஜேந்திரனின் கூட்டாளியாக அந்த அதிமுக்கிய தலைவர் இருந்து வந்ததால் தற்போது அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள்.
எப்போது வேண்டுமானாலும் அழைப்பு
தமிழக காங்கிரஸின் அந்த அதிமுக்கிய தலைவருக்கான குட்லக் ராஜேந்திரனின் நிதி உதவி அனைத்துமே தங்க கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் கிடைத்தவையே என்கிறது வருவாய் புலனாய்வு வட்டாரங்கள். ஆகையால் அந்த அதிமுக்கிய தலைவர் எந்த நேரத்திலும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் விசாரணைக்கு வரவழைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.