வேலைநிறுத்தம் எதிரொலி: வட சென்னை பகுதிகளில் ஒரு கேன் ரூ.100க்கு மேல் விற்பனை!
குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள வேலைநிறுத்தத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கேன்களின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை: ஜிஎஸ்டியில் 18% வரி விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் கேன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை மக்கள் முக்கிய குடிநீர் ஆதாரமாக கேன்களையே பயன்படுத்தி வருகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போயுள்ளதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் மக்கள் குடிநீர் கேன்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர்கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது மக்களை விழிபிதுங்க செய்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு
குடிநீர் கேன் உற்பத்தி மீது ஜிஎஸ்டி 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிராக தனியார் கேன் உற்பத்தியாளர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் தண்ணீர் கேனின் விலை பலமடங்கு உயரக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.
நேற்று மாலை முதல் ஸ்ட்ரைக்
நேற்று மாலை முதல் தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே வைத்திருக்கக்கூடிய தண்ணீர் கேன்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
ரூ.100க்கு மேல் விற்பனை
ஆனால் வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைகளில் வைத்திருக்கக்கூடிய தண்ணீர் கேன்களை பதுக்கி வைத்து ரூ.100க்கும் மேல் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் விநியோகம் நிறுத்தம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 370 தண்ணீர் உற்பத்தி நிலையங்கள் இருக்கிறது. இந்த நிலையங்கள் மூலம் தினந்தோறும் 10 லட்சம் கேன்கள் விற்பனைக்காக வருகிறது. ஆனால் 200க்கும் மேற்பட்ட கேன் நிறுவனங்கள், தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கேன்களின் விலை உயர்வு
மேலும் சிறு கடைகளில் தண்ணீர் கேன்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் இருந்து ரூ.80 முதல் ரூ.100க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மக்கள் திணறல்
ஏற்கனவே சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர்கேன்களின் இந்த வேலைநிறுத்தத்தால் மக்கள் திணறி வருகின்றனர். வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.