தேர்தல் ரத்தான கையோடு குடிநீர் வினியோகம் நிறுத்தம்: ஆளும்கட்சி மீது செமகடுப்பில் ஆர்.கே. நகர் மக்கள்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட கையோடு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆட்கள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. பணப் பட்டுவாடா விவகாரம் பூதாகரமானதால் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
முன்னதாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆர்.கே. நகருக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அந்த தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
தேர்தல் ரத்து என்று அறிவிக்கப்பட்ட கையோடு ஆர்.கே. நகர் தொகுதிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்பால் குடிநீர் கஷ்டம் இன்றி இருந்த மக்கள் தற்போது குடிக்க நீரின்றி அவதிப்படுகிறார்கள்.
தேர்தல் என்றால் ஒருவிதமாகவும், தேர்தல் இல்லை என்றால் மறுவிதமாகவும் நடந்து கொள்கிறார்களே என்று ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.