சரக்கு எங்க சாமி.. நடுரோட்டில் சாலை மறியலில் குதித்த குடிகாரர்...!
செய்யாறு: ஊரே மதுக் கடைகளை மூடக் கோரி போராட்டங்களில் குதித்துள்ளது. எங்கு பார்த்தாலும் போராட்டமாக உள்ளது. ஆனால் மது கிடைக்காத கோபத்தில் ஒரு குடிகாரர் சாலை மறியல் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும். தமிழகம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மது விலக்குக்காக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் போராட்டத்தின்போதே மரணமடைந்து விட தற்போது மதுவுக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று தமிழகம் முழுவதும் பந்த் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் போராட்டங்களால் மதுக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிகாரர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் கடைகளை மூடுவதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்யாறு அருகே எச்சூர் என்ற கிராமத்தில் மதுக் கடை மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு நபர் சாலை மறியலில் குதித்து அனைவரையும் அதிர வைத்தார்.