டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ - கைது செய்வதாக மிரட்டிய டி.எஸ்.பி.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட கடையநல்லூர் எம்எல்ஏவை கைது செய்யப் போவதாக டிஎஸ்பி மிரட்டியதால் பரபரப்பு எற்பட்டது.
செங்கோட்டை : பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கரை கைது செய்வதாக புளியங்குடி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
கடையநல்லூர்நெல்லைமாவட்டம் கடையநல்லூர்-பண்பொழி சாலையில் தனியார் பள்ளி, மசூதி ஆகியவை அமைந்துள்ள பகுதியில் மாநில சாலையை ஒட்டிய பகுதியில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்தக்கடை அமைக்கும் போதே இதற்கு இந்தப்பகுதி வழியே வயல்களுக்கு,தோப்புக்களுக்கு செல்லும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
டாஸ்மாக் கடை முற்றுகை
இதன் ஒருபகுதியாக கடையநல்லூர்-பண்பொழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் தலைமையில் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்.
எம்எல்ஏவிடம் வாக்குவாதம்
உடனடியாக தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையின் சாவியை கேட்டனர். அனால் அவர் கொடுக்க மறுத்து விடவே புளியங்குடி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் கடையநல்லூர் எம்எல்ஏ அபூபக்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கைது மிரட்டல்
அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் புளியங்குடி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர் சாவியை கொடுக்கவில்லை என்றால் கைது செய்யவேண்டியது வரும் என்று கூறினார். தைரியமிருந்தால் கைது செய் . தமிழ்நாட்டில் என்ன நடக்குன்னு பார்க்கலாம் என்று எம்எல்ஏ அபூபக்கர் கூறினார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
சாலை மறியல்
பின்னர் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட முயன்றனர். பின்னர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தாமாகவே கலைந்தது சென்றனர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்போடு பணியாளர்கள் டாஸ்மாக் கடையை திறந்தனர்.