தாமரையை விட்டு வெளியே வாங்க தலைவரே… கேப்டனை நெருக்கும் மாசெக்கள்… தடுக்கும் பிரேமலதா!!
சென்னை: எந்த கூட்டணியில் இருக்கிறார் விஜயகாந்த்... 2016 சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியில் இணைவார் என்பதுதான் இப்போதைக்கு பரபரப்பு பேச்சு. விஜயகாந்தை வைத்தே இன்றைக்கு ஊடகங்களில் அதிக அளவில் கார்டூன்கள் வரையப்படுகின்றன. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.கட்சி தொடங்கிய புதிதில் மக்களுடன் கூட்டணி என்றார். 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி சேர்ந்தார். சேர்ந்த வேகத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
2014 லோக்சபா தேர்தலில் மச்சினனுக்கு மந்திரி பதவி, மனைவிக்கு ராஜ்யசபா எம்.பி பதவி என்று கணக்கு போட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். 14 கொடுத்தா வருவேன் இல்லாட்டி வேற ஆளை பாத்துக்கங்க என்று எல்லாரையும் கடைசி வரை மண்டை காய வைத்து ஒருவழியாக கூட்டணிக்கு வந்தார் விஜயகாந்த். அது பொருந்தாத கூட்டணி என்று அதில் இணைந்த அனைவருக்குமே தெரியும்.
பாமக ஒரு பக்கம் திரும்பிக்கொள்ள அங்கிருந்து அன்புமணி மட்டுமே வர ஒருவழியாக கும்மியடித்து லோக்சபா தேர்தலை சந்தித்தனர். சேலத்தில் பாமகவினர் நடத்திய உள்குத்தில் சுதீஷ் தோற்று போனதை வரலாறு மறக்காது. ஒருவழியாக தர்மபுரியில் அன்புமணி அதிர்ஷ்டவசமாக ஜெயித்து மீண்டும் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்து விட்டார். அவ்வளவுதான் தேனிலவு முடிந்து விட்டது என்று பாஜக கூட்டணிக்கு மங்களம் பாடிவிட்டு பாமகவின் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து விட்டார்.
திரிசங்கு நிலையில்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிலைதான் திரிசங்கு நிலையாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏதோ ஒரு சாக்கு சொல்லி எதிர்கட்சியினர் அனைவரையும் ஒன்று திரட்டிக்கொண்டு டெல்லி போன விஜயகாந்த் அங்கே தனது மனைவி, மைத்துனருடன் மோடியை தனியே ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் சேர்ந்து போன கட்சிகள் திரும்பி வரும்போதே பிரிந்துவிட்டன. மோடியுடன் விஜய்காந்த் என்ன பேசினார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
சட்டசபை தேர்தலில்
இந்த நிலையில் 2016 சட்டசபை தேர்தலில் தனது தலைமையில் கூட்டணி அமையவேண்டும் என்று விரும்பும் விஜயகாந்த், அதற்காக காய் நகர்த்த தொடங்கியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்த விஜயகாந்த் இம்முறையும் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து புது கூட்டணி உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னேட்டமாகவே மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து போராட தயாராகி வருகிறாராம் விஜயகாந்த். இரு தினங்களுக்கு முன் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இடதுசாரிகள் நடத்திய போராட்டத்தை மாவட்டவாரியாக விரிவாக 10 நிமிடம் கவர் செய்தது கேப்டன் டிவி.
யோகாதின கொண்டாட்டம்
ஆனால், அதற்கு ஒரு நாள் முன்பு மோடியின் அழைப்பை ஏற்று சர்வதேச யோகா தினத்தை தமிழக அரசியல் கட்சிகள் யாரும் கொண்டாட ஆர்வம் காட்டாத நிலையில், தேமுதிக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் உற்சாகமாக யோகா செய்து அசத்தினார் விஜயகாந்த். இதன்மூலம் பாஜகவுடன் இன்னும் நெருக்கமாகவே இருப்பதை மறைமுகமாகக் காட்டினார் விஜயகாந்த். இதனால் யாருடன் போவது, பாஜகவா, இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளா என்பதில் விஜய்காந்துக்கு பெரும் குழப்பம் நிலவுவதாகவே தெரிகிறது.
தாமரையை விடுங்க
சென்னையில் தேமுதிக நடத்திய யோகா நிகழ்ச்சி முடிந்த உடன் பேசிய விஜயகாந்த் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, சேத்துல தாமரை மலருமே... அது மாதிரி என்று பேசினார். அப்போது மாவட்ட செயலாளர்கள் பக்கமிருந்து ‘தாமரையை மறந்துட்டு வெளியே வாங்க தலைவரே' என்று குரல் கேட்டதாம்.
விரும்பாத பிரேமலதா
மாவட்ட செயலாளர்கள் இப்படி சொன்னதை பிரேமலதா விரும்பவில்லையாம். இதிலிருந்து பாஜக கூட்டணியை விடாமல் பிடித்திருப்பது பிரேமலதாதான் என்பதை புரிந்து கொண்டார்களாம் மாவட்ட செயலாளர்கள். பாரதிய ஜனதா கட்சிதான் முக்கியம் என்றால் கேப்டனையும் கட்சியையும் விட்டுட்டு பேசாமல் அண்ணி போய் பாஜகவில் போய் சேர்ந்து கொள்ளட்டுமே என்று காது படவே பேசினார்களாம் சிலர்.
கேட்பாரா கேப்டன்
எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு ஆற அமர யோசிப்பார் விஜயகாந்த். பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை மாவட்ட செயலாளர்களை கேட்டு எடுப்பாரா? இல்லை மனைவி சொல்லே மந்திரம், மச்சினன் சொல்லே மூலமந்திரம் என்று முடிவெடுப்பாரா என்பதுதான் அரசியல் வானில் பரபரக்கும் கேள்வியாகும்.
அப்போ கூட்டணி?
ஒருவேளை பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் திமுக உடன் நெருங்குவாரா? அல்லது தனது தலைமையில் புதிய அணியை உருவாக்குவாரா என்பதும் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் எழும் கேள்வியாகும். வலுவான கூட்டணியுடன் இணையாமல் தனித்து நிற்கும் பட்சத்தில் சொந்த காசை செலவழித்து மீண்டும் தோத்துப்போக தேமுதிகவில் வேட்பாளர்கள் தயாராக இருப்பார்களா? என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்.