எல்லோரும் கையெழுத்து போட்டுதானே என்னை பதவிக்கு கொண்டு வந்தார்கள்.. டிடிவி தினகரன் 'லாஜிக்'
அனைவரும் கையெழுத்திட்டுதான் என்னை துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அதேபோல பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனமும் செல்லுபடியாகும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவில் எல்லோருமே கையெழுத்திட்டுதான் தன்னை துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கட்சி துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தது செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி அணியினர் இன்று தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தினகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக துணை பொதுச்செயலாளராக என்னை நியமனம் செய்தது செல்லும். கழக விதிகளுக்கு உட்பட்டுதான் என்னை துணை பொதுச்செயலாளராக, சசிகலா நியமித்தார்.
கையெழுத்து போட்டனர்
அனைவரும் கையெழுத்திட்டுதான் என்னை துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அதேபோல பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனமும் செல்லுபடியாகும். அவர் பொருளாளர் என்ற வகையில், அதிமுகவிடமிருந்து ஊதியம் பெற்றுள்ளார்.
உள்ளே ஒன்று, வெளியே ஒன்று
கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது. என்னை துணைப் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் கொடுத்தவர்கள் இப்போது வேறு மாதிரி பேசுகிறார்கள்.
மடியில் கனம்
நேற்று முளைத்த காளான்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மடியில் கனம் இருப்பதால் எங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சுதந்திரமாக செயல்படலாம் என்று நினைக்கிறார்கள்.
முதல்வருக்கு எச்சரிக்கை
கட்சிக்கு விரோதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டாலும் அவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன். மடியில் கனம் இருந்தால் முதல்வராக இருந்தால்கூட பயம் வரத்தான் செய்யும். நான் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளதால் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.