பேச்சலர் அறைகளில் லேப்டாப் திருடி உல்லாச வாழ்க்கை - 52 லேப்டாப்களுடன் 2 பேர் கைது!
சென்னை: சென்னை வேளச்சேரி, கிண்டி பகுதியில் தொடர்ந்து லேப்டாப்கள் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 52 லேப் டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.
வேளச்சேரி, கிண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடந்த லேப்டாப் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கிண்டி சரக உதவி ஆணையர் பி. நந்தகுமார் தலைமையில் வேளச்சேரி ஆய்வாளர் சேகர்பாபு ,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிர விசாரணையில் சிக்கிய எம்கேபி. நகர் முகமது இம்ரான், பழைய வண்ணாரப்பேட்டை சௌந்தர்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு பேரும் சேர்ந்து வேளச்சேரி ராம்நகர், தண்டீஸ்வரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கிண்டி, தரமணி, துரைப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் குடியிருக்கும் பேச்சலர்கள் அறைகளை கண் காணித்து லேப்டாப்புகளை திருடியது தெரியவந்தது.
இவர்கள் திருடிய லேப்டாப்புகளை வேலூர், திருவிகநகர், பர்மாபஜார் ஆகிய இடங்களில் விற்று கிடைத்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்களிடமிருந்து 50 லேப்டாப்களை பறிமுதல் செய்யப்பட்டது இவற்றின் மதிப்பு சுமார் ரூபாய் 10 லட்சம் ஆகும். கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.