என்னாது ஒ.பிஎஸ் குடிநீருக்கு போராடுறாரா?...நல்ல கேலிக்கூத்து - துரைமுருகன் சீண்டல்!
தமிழக அரசை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது கேலியான விஷயம் என்று திமுக முதன்மைச் செயலாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக அரசில் நேற்று வரை இருந்து விட்டு இன்று குடிநீர் பிரச்னைக்காக ஓ.பன்னீர்செல்வம் போராடுவது கேலியாக இருக்கிறது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஓ.பிஎஸ் முதன்முறையாக அரசை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளார். அனுமதி கொடுக்காவிட்டாலும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் குறித்து துரைமுருகன் கருத்து கூறுகையில்: ஓ.பன்னீர்செல்வம் குடிநீருக்காக போராட்டம் நடத்துவது கேலியாக இருக்கிறது, அதிமுக அரசில் நேற்று வரை இருந்து விட்டு இன்று போராடுவதா? குடிநீர் பிரச்னையை தீர்க்க எப்போதாவது நடவடிக்கை எடுத்துள்ளாரா ஓ.பிஎஸ்.
கிடப்பில் போடப்பட்ட கிருஷ்ணா நதிநீர்த்திட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது, சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும திட்டம் திமுக ஆட்சியில் துவங்கி பணி முடிந்தது.அதிமுக ஆட்சியில் சென்னை குடிநீர் பிரச்னையைத் தீர்க்கத் திட்டம் நிறைவேற்றியது உண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.