நம்ப வைத்து ஏமாற்றிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் - துரைமுருகன்
நீட் தேர்வு விவகாரத்தில் கருத்து சொல்லி மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை நம்பி தமிழக அரசு ஏமாந்துவிட்டது என துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அனிதா தற்கொலை குறித்து கருத்து கூறியுள்ள துரைமுருகன், மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடியுள்ளார்.
தமிழக மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவி அனிதாவின் தற்கொலை மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கும் நிர்மலா சீதாராமனுக்கு என்ன தொடர்பு? அது அவரது துறையே இல்லை. ஆனால் நிர்மலா சீதாராமன்தான் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று கூறினார். இது மோடியின் குரல்தான். அவர் சொல்லாமல் நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசும், தமிழக அரசும் தான் அனிதாவின் மரணத்திற்கு காரணம். நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி தருவோம் என்று கடைசி வரை இழுத்தடித்து இறுதியில் தமிழக அரசு அதனையும் வாங்கி தரவில்லை. தமிழக மாணவர்களை கடைசி வரை குழப்பத்திலேயே வைத்து இருந்தது தமிழக அரசு.
மருத்துவ கனவுகளோடு இருந்த மாணவ, மாணவிகளை மன உளைச்சலிலேயே வைத்திருந்தது. கடைசி வரை நம்பிக்கையோடு இருந்த அனிதா தனது கனவு தகர்ந்து போனதால் மன உளைச்சல் ஏற்பட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டு விட்டார் என்றும் கூறினார் துரைமுருகன்.