‘மும்மூர்த்திகளின் (3 அமைச்சர்கள்) ஊழல் சாம்ராஜ்ஜியம்’.. வெளியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: அதிமுக அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், தோப்பு வெங்கடாசலம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் ஊழலை அம்பலப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள ‘மும்மூர்த்திகளின் ஊழல் சாம்ராஜ்ஜியம்' புத்தகத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டார்.
அதிமுக அமைச்சர்களின் துறை ரீதியான ஊழல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று அதனை நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார் மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் அன்பழகன். இந்த நூல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
நூலை வெளியிட்டு பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நான்கு அமைச்சர்களின் ஊழல் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலும் இந்த புத்தகம் அதிக இடத்திற்கு சென்றடையவேண்டும் என்றார்.
அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வறட்சி நிவாரண நிதியில் ரூ.27 கோடியை சுருட்டி விட்டார். இந்த புத்தகத்தில் உள்ள அமைச்சர்களின் முகத்தை பார்த்தாலே இவர்கள் ஊழல்வாதிகள் என்று தெரிகிறது.
மின்துறையில் ஊழல், இங்குபேட்டரில் ஊழல் என பல ஊழல்கள் அதிமுக ஆட்சிகாலத்தில் நடைபெற்றுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்கள் பெறப்பட்டு ஆதாரப்பூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்றார்.