தமிழகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க சபதம் ஏற்போம்... மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை : தமிழகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க அனைவரும் சபதமேற்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது...
இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகவும், 2-வது குடியரசுத் தலைவராகவும் இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் சிறந்த கல்வியாளர் மட்டுமின்றி. நாடு போற்றும் ராஜதந்திரியாகவும் விளங்கியவர்.
நமது வாழ்வில் ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்காக ஆசிரியர்கள் ஆற்றிவரும் மகத்தான பணி, அவர்களின் அன்பு ஆகியவற்றுக்காக நன்றி செலுத்தும் கோடிக்கணக்கான இந்தியர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன். இந்நாளில் ஆசிரியர்களுக்கு எனது நன்றி உணர்வை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அனைவரும் இந்நாளில் சபதமேற்க வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.