மின்சார மீட்டர் தட்டுப்பாட்டால் தள்ளாடும் கட்டுமானப் பணிகள்
நெல்லை: தமிழகத்தில் புதிய மின் இணைப்பு தேவைப்படுவோர் நவீன டிஜிட்டல் மின் மீட்டரையே பயன்படுத்த வேண்டுமென மின் வாரியம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் போதுமான அளவில் மின் மீட்டர் கிடைக்காததால் கட்டுமான பணிகள் முடங்கி போய் உள்ளன.
புதிய மின் மீட்டருக்காக குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் 2 பேரிடமிருந்து மட்டுமே வாங்கி கொடுக்க வேண்டும் என மின் வாரியம் அறிவித்தது. அப்படி கொடுத்தால் மட்டுமே ஆய்வு செய்து இணைப்பு கொடுக்கப்படும் என மின் வாரியம் அறிவித்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சில இடங்களில் மட்டுமே விற்ற அந்த மின் மீட்டரை பெற மக்கள் அலைபாய்ந்தனர். மின் வாரியத்தில் ரூ.700 விற்கப்பட்ட அந்த மின் மீட்டர் வெளி மார்க்கெட்டில் சுமார் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மின் வாரியம் மொத்தமாக கொள்முதல் செய்து டிஜிட்டல் மின் மீட்டர்களை வழங்கியது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக மின் மீட்டர் பற்றாக்குறை குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மின் மீட்டர் தட்டுப்பாடு மீண்டும் தலைதூக்கியுள்ளது.
அதனால் பழைய முறைப்படி வெளியில் இருந்து மின் மீட்டர்களை வாங்கி வரும்படி மின் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் ஏற்கனவே ஓப்படைக்கப்பட்ட பழைய மின் மீட்டர்களை வழங்கியும் நிலைமையை சமாளித்து வருகின்றனர்.
மாநகர பகுதிகளில் ஓவ்வொரு மின் வாரிய அலுவலகத்திலும் புதிய இணைப்பு வழங்க கோரி 150 முதல் 300 பேர் வரை காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. மின் மீட்டர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் இணைப்பு கிடைக்காத புதிய குடியிருப்பு மற்றும் வாணிக வாளக கட்டுமான பணிகள் முடிங்கியுள்ளன.
இதுகுறித்து நுகர்வோர் கூறுகையில், கடந்த 1 மாத்திற்கும் மேலாக காத்திருக்கிறோம். மின் மீட்டர் மின் வாரியத்திலும் கிடைக்கவில்லை. தனியாரிடமும் கிடைக்கவில்லை. எப்போது மின் மீட்டர் கிடைக்கும் என தெரியவில்லை. இதனால் புதிதாக வீடு கட்ட கூட முடியாமல் தவித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.