அரவக்குறிச்சியில் நாளை முதல் 21ம் தேதி வரை பிரச்சாரம் செய்யலாம்: தேர்தல் ஆணையம்
சென்னை: தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சியில் நாளை முதல் 21ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் அதிக அளவில் அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து அங்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 16ம் தேதிக்கு பதில் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் 25ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் வரும் 21ம் தேதி மாலை 6 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரவக்குறிச்சியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.
பணப்பட்டுவாடா புகாரால் ஒரு சட்டசபை தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.