டெல்லி போலீஸ் விசாரணையில் செம தெனாவெட்டை காட்டிய அசால்ட் தினகரன்!
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷுடன் பேசியதை தினகரன் ஒப்புக் கொண்டபோதிலும் அவர் மிகுந்த தெனாவெட்டுடன்தான் இருப்பதாக டெல்லி போலீஸார் கூறுகின்றனர்.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷுடன் பேசியதை தினகரன் ஒப்புக் கொண்டபோதிலும் அவர் மிகுந்த தெனாவெட்டுடன் கவலையே இல்லாமல் இருப்பதாக டெல்லி போலீஸார் கூறுகின்றனர்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார், தினகரனுக்கு எதிராக மேலும் ஆதாரங்களை திரட்ட சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
சுகேஷும், தினகரனும் பேசிக் கொண்டிருந்த ஆடியோ ஆதாரம் இருந்த போதிலும் அதைத் தாண்டிய வேறு சில ஆவணங்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். ஒரு வழக்கறிஞரின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்தே தினகரன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சுகேஷுடன் போனில் பேசியதை தினகரன் ஒப்புக் கொண்டபோதிலும் அவர் மிகவும் தெனாவெட்டாக இருப்பதாக போலீஸார் கூறினர். இந்த ஆதாரம் என்பது இந்த வழக்கில் தினகரனை தொடர்புபடுத்த சிறிய ஆதாரமாகும். ஆனால் அவற்றை உறுதிப்படுத்த போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை டெல்லி போலீஸார் சென்னையில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் முக்கிய ஆதாரம் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.