இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 845; புதுச்சேரியில் 30 வேட்பாளர்கள் போட்டி!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 845 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 30 வேட்பாளர்களும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மொத்தம் 106 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.
புதுச்சேரியில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் புதிதாக வெளியிட்டுள்ள செருப்பு சின்னத்தை பெறுவதற்கு சுயேச்சை வேட்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 24ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,261 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
864 மனுக்கள் ஏற்பு
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு காரணங்களுக்காக 367 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 894 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இறுதி வேட்பாளர் பட்டியல்
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாலையில் தமிழகத்தில் உள்ள தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னையில் 106 பேர்
அதன்படி சென்னையில் மட்டும் மொத்தமுள்ள 3 தொகுதிகளில் மொத்தம் 106 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில் தென் சென்னை தொகுதியில் மிக அதிகபட்சமாக 42 பேர், வடசென்னையில் 40 பேர், மத்திய சென்னையில் 20 பேர்,
வேலூர் அரக்கோணம்
வேலூரில் 27 பேர், அரக்கோணத்தில் 24பேர், சேலத்தில் 25 பேர், நாமக்கல்லில் 26 பேர், பெரம்பலூரில் 21 பேர், கிருஷ்ணகிரியில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
திருச்சி, ராமநாதபுரம்
திருச்சியில் 29 பேர், ராமநாதபுரத்தில் 31 பேர், கரூரில் 25 பேர், கோவையில் 25 பேர், மதுரையில் 31 பேர், தூத்துக்குடியில் 14 பேர், ஆரணி 19 பேர், திருவண்ணாமலையில் 24 பேர் போட்டியிடுகின்றனர்
தஞ்சாவூர், கன்னியாகுமரி
தஞ்சையில் 12 பேர், கன்னியாகுமரியில் 19 பேர், நீலகிரியில் 10 பேர், கடலூரில் 17 பேர், திருப்பூரில் 26 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
வைகோவுக்கு போட்டி 25 பேர்
விருதுநகர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் வைகோ உடன் சேர்த்து மொத்தம் 26 பேர் களத்தில் உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 11 பேர்
சிவகங்கையில் 27 பேர், சிதம்பரத்தில் 15 பேர், தென்காசியில் 17 பேர், ஸ்ரீபெரும்புதூரில் 21 பேர், நெல்லையில் 27 பேர், காஞ்சிபுரத்தில் 11 பேர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி களத்தில்
இதேப்போன்று புதுச்சேரியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
30 பேர் போட்டி
அதன்படி, புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்பட 30 வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. மேலும், பா-ஜ.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ம.க. வேட்பாளர்கள் போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது.
ஆலந்தூர் இடைத்தேர்தல்
இதனிடையே ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.