ஓ.பன்னீர்செல்வம் வெறும் அம்புதான்.. எய்த வில் யார் தெரியுமா? வைகை செல்வன் விளாசல்
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய முடிவில் தேர்தல் ஆணையம் தவறு செய்துவிட்டதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து இரட்லை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டியில் தேர்தல் ஆணையம் அச்சின்னத்தையும், கொடியையும் முடக்கியது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: துரோகத்தின் வெற்றி எப்போதும் தற்காலிகமானதுதான் என்பதை எத்தனையோ தடவை வரலாறு நிரூபித்து காட்டியுள்ளது.
அம்பு
எங்களைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் வெறும் அம்பு தான். அதை எய்தவர்கள் திராவிட இயக்கத்தை வேரறுக்க நினைப்பவர்கள் என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் கூறியது தற்போது உண்மையாகிவிட்டது.
பச்சைகுத்தப்பட்ட சின்னம்
தேர்தல் ஆணையம் தன்னுடைய முடிவை அறிவித்ததில் எங்கேயோ பெரும் தவறு நடந்துள்ளது. இரட்டை இலை என்பது எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி இன்று வரை மக்கள் மனங்களில் பச்சை குத்தப்பட்டுள்ள சின்னம். அதை ஒரு இடைக்கால ஆணை மூலம் அழிக்க நினைக்கிறார்கள்.
கண்துடைப்பு நாடகம்
இரட்டை இலையை முடக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டு தற்போது விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பு நாடகம் நிகழ்ந்துள்ளது. இரட்டை சிலை சின்னத்துக்கு ஓ.பி.எஸ் அணியினர் உரிமை கொண்டாடும் அளவிற்கு கழகத்தின் அமைப்பு ரீதியிலான நிர்வாகிகள் தரப்பில் ஆதரவு இல்லை.
சின்னத்தை முடிவு செய்வது இப்படிதான்
ஆனால் 122 சட்ட மன்ற உறுப்பினர்கள், 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 95 சதவீத பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் சசிகலாவின் தலைமைக்கு ஆதரவளித்திருந்தனர். ஒரு கட்சியின் சின்னத்தை முடிவு செய்வது என்பது இந்த எண்ணிக்கையை மையமாகக் கொண்டதாகவே இருக்கும்.
உ.பி.யிலும் இதே நிலைதான்
அப்படித்தான் சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்திருந்தது. எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவில் தவறு நிகழ்ந்துள்ளது என்று தன் அறிக்கையில் வைகைச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.