தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பு குறித்த விளக்கம் திருப்தி இல்லை- ஜெ.வுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
சென்னை: தேர்தல் அறிக்கையில் இலவச வாக்குறுதிகளை அளித்துள்ள அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்களுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதற்கான விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைப்பேசி, பொங்கலுக்கு ரூ.500க்கு கோப் ஆப்டெக்ஸ் ஜவுளி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனையும் ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி பற்றி தேர்தல் அறிக்கையில் கூறவில்லை என தேர்தல் ஆணையம் புகார் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நோட்டீஸுக்கு அதிமுக அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லையென தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக, பாமக:
இதேபோல் திமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளும் இலவசங்களை அறிவித்திருந்தன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
அதேபோல் பாமகவின் தேர்தல் அறிக்கையில், படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.