சேகர் ரெட்டியை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி!
சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரை 3 பேரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தொழிலதிபர் சேகர் ரெட்டி, சினிவாசலு, பிரேம்குமார் ஆகிய 3 பேரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது. இதில் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது.
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மூவருக்கும் கடந்த 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இதனிடையே திடீரென சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. பின்னர் கடந்த 20 ஆம் தேதி சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி நசீர் அகம்மது முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 139 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் 34 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டும் மற்றும் 176 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் 176 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தற்போது சேகர் ரெட்டி, சீனிவாசலு, மற்றும் பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பு கோரியது.
அப்போது சேகர் ரெட்டி உள்பட 3 பேரின் தரப்பும் ஏற்கனவே சி.பி.ஐ. கைது செய்யபோது, அமலாக்கப்பிரிவினர் எங்களை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அதில் தங்க நகைகள் பற்றியும் தெரிவித்துள்ளோம். எனவே தற்போது காவலில் விசாரணைக்கு அனுப்புவது தேவையில்லை என்றனர்.
அதே போல், சேகர் ரெட்டி உள்பட 3 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், ஏற்கனவே காவலில் எடுத்து விசாரித்தபோது மீண்டும் காவலில் எடுக்க அனுமதி கொடுக்க தேவையில்லை. மேலும் நீதிபதி காவல் கொடுக்க விரும்பினால் ஒரு நாள் மட்டும் காவல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நீதிபதி நசீர் அகம்மது சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் 3 பேரையும் 27ம் தேதி மாலை 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.