மெடிக்கல் சீட் மோசடி வழக்கு.. வேந்தர் மூவிஸ் மதனிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை
மருத்துவச் சீட்டு மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனிடம் சென்னையில் அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: மருத்துவ பல்கலைக் கழகத்தில் சீட் மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனிடம் சென்னையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலை கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக ரூ80 கோடி வசூலித்து மோசடி செய்தார் மதன் என்பது குற்றச்சாட்டு. கடந்த ஆண்டு மே மாதம் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் வசூலித்த பணத்தை கொடுத்துவிட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார் மதன்.
இதையடுத்து பல மாத தேடுதல் வேடைக்குப் பின்னர் திருப்பூரில் பெண் ஒருவருடன் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த மதன் கோவையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
பல கோடி ரூபாய் தொடர்புள்ள இந்த முறைகேட்டில், கறுப்புப்பணம் தலையீடு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் மதனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதுதொடர்பாக எந்தெந்த வகையில் பணம் பெறபட்டது? பெறப்பட்ட பணம் யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது? எந்தெந்த வகையில் செலவு செய்யப்பட்டது? என்பது குறித்து மதனிடம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.