எடப்பாடி பழனிச்சாமி்க்கு ஆளுநர் அழைப்பு- பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுகிறார்?
தமிழக அரசியலில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வர உள்ளது. அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சசிகலாவால் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தன்னை சந்திக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து அவரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது. இதனால் கூவத்தூரில் பெரும் கொண்டாட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்பட 4 மூத்த அமைச்சர்களும் தலைவர்களும் அவரை சந்திக்க கூவத்தூர் விடுதியில் இருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.
மூன்றாவது முறையாக தன்னை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமியிடம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சியமைக்க உத்தரவிடுவார் என்று தெரிகிறது.
முதலில் இப்போதைய காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இதே போன்ற ஒரு வாய்ப்பை ஆளுநர் தருவார் என்றும் தெரிகிறது. அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டாலோ அல்லது தனக்கு போதுமான ஆதரவு இல்லை என்று கூறிவிட்டு பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தாலோ எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆளுநருக்கு தந்த முக்கிய யோசனையின்படி, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை ஒரே நேரத்தில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் (composite floor test in assembly) ஆளுநர் உத்தரவிடலாம்.
இதுவரை நிலவி வந்த பெரும் அரசியல் குழப்பத்துக்கு இன்று விடை கிடைக்கப் போகிறது.