இணைப்பதாக நாடகமாடுகிறார்கள்... நாங்கள் கலைத்தோம் - விளக்கம் சொன்ன ஓபிஎஸ்
பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்கள் நாடகமாடுகிறார்கள். அதனால் குழுவை நாங்கள் கலைத்தோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பிற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழுவை கலைத்து விட்டதாக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழு கலைக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தார்.
கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் பேசிய ஓபிஎஸ், தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று சொல்லி அவர்கள் நாடகமாடுகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாகவே உள்ளது. தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்து இருக்கிறோம் என்றார்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் எங்கள் அணியின் ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்போம்.
அதிமுகவில் பிரிந்துள்ள அணிகளை இணைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு அணிகள் சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஆளுக்கு ஆள் பேட்டி கொடுத்து இணைப்பு தள்ளிப்போனது.
ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி அணி தயாராக இல்லை. இடையே டிடிவி தினகரன் வேறு குட்டையை குழப்புகிறார்.
எனவேதான் அணிகள் இணைவதை மக்கள் விரும்பவில்லை என்று கூறி பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவை கலைப்பதாக கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.
ஆனால் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் அணிகள் இணையவேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த நிலையில்தான், இணைப்பு என்ற பெயரில் நாடகமாடுகிறார்கள். நாங்கள் கலைத்து விட்டோம் என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்று கூறிய அவர், இணைப்பு தொடர்பான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடப்பாடி அணி எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.