விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால் முதல்வர் எடப்பாடியிடம் விசாரணை?
விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யாவிட்டால் முதல்வர் எடப்பாடிக்குதான் சிக்கல் என டெல்லி எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
சென்னை: அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கமுடியாது என அடம்பிடித்த தினகரன் வசமாக இப்போது சிக்கிக் கொண்டார்... விஜயபாஸ்கரை நீக்காமல் இருந்தால் அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சிக்கல்தான் என்கின்றன டெல்லி தகவல்கள்.
சசிகலா கோஷ்டிக்கு அனைத்துமாக வலம் வந்தவர் விஜயபாஸ்கர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்களை சசிகலாவுக்காக கண்காணித்து போட்டுக் கொடுத்தவர்.
வளைக்கப்பட்ட விஜயபாஸ்கர்
அப்போது முதலே விஜயபாஸ்கருக்கு குறிவைத்தது மத்திய அரசு. செகர் ரெட்டி சிக்கியதைத் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து இப்போது விஜயபாஸ்கர் வளைக்கப்பட்டுள்ளார்.
அடம்பிடித்த தினகரன்
இருந்தபோதும் டிடிவி தினகரன் தயவில் அவர் அமைச்சராக தொடர்ந்து நீடிக்கிறார். மத்திய அரசின் நகர்வுகளை நன்கு அறிந்த தம்பிதுரையும் கூட விஜயபாஸ்கரை நீக்கியாக வேண்டும் என தினகரனிடம் வலியுறுத்தினார். ஆனால் தினகரன் இடம் கொடுக்கவில்லை.
வசமாக சிக்கிய டிடிவி
இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து வளைக்க முயற்சித்த வழக்கில் வசமாக சிக்கிக் கொண்டார் தினகரன். இதையடுத்து தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தம்பிதுரை ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடிக்கு சிக்கல்
இந்த ஆலோசனையின்போதும் விஜயபாஸ்கரை நீக்காவிட்டால் உங்களுக்குதான் சிக்கல் வரும். தமிழக பாஜக தலைவர்கள் உங்களையும் குறிவைத்து டெல்லிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என வலியுறுத்தியிருக்கிறார் தம்பிதுரை. இதனால் என்ன செய்வது என கொங்கு மண்டல எம்.எல்.ஏக்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம் எடப்பாடி.