திமுக எம்.எல்.ஏக்களுக்கு குறிவைக்கும் எடப்பாடி கோஷ்டி... அதிர்ச்சியில் ஸ்டாலின்!
திமுக எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடுவதில் எடப்பாடி கோஷ்டி மும்முரம் காட்டுவது அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை: திமுக எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி கோஷ்டி குறிவைத்திருப்பது அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக சில எம்.எல்.ஏக்களிடம் விளக்கமும் கேட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. 100 நாட்களுக்கும் மேலாக ஆட்சியை நடத்தி வருகிறார்.
தற்போது எடப்பாடி கோஷ்டி விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதில் எடப்பாடி கோஷ்டி உறுதியாக உள்ளது.
தினகரன் கெடு
இதனால் அதிருப்தி அடைந்த தினகரன் தரப்பு, ஆட்சியையும் கட்சியையும் ஆகஸ்ட் 5-ந் தேதிக்குள் ஒப்படைக்க எடப்பாடி அணிக்கு கெடு விதித்துள்ளது. அப்படி ஒப்படைக்காவிட்டால் ஆட்சியை கவிழ்க்கவும் தயார் என தினகரன் எச்சரித்திருக்கிறார்.
திமுக எம்எல்ஏக்கள் மீது பாசம்
இந்த நிலையில் திடீரென திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் பாசத்தை பொழிய தொடங்கி உள்ளனர். தொகுதிகளுக்குள் எந்தப் பணி நடந்தாலும் தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கும் உரிய கமிஷன் கொடுக்குமாறு என அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஸ்டாலின் தீவிர கண்காணிப்பு
ஒருவேளை தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் குடைச்சல் கொடுத்தால் அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த உத்தரவாம். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார் ஸ்டாலின்.
வலையில் சிக்குவது யார்?
வடக்கு மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்களைத்தான் ஸ்டாலின் தீவிரமாகக் கண்காணிக்கிறாராம். தொகுதிப் பணி என்று சொல்லிக் கொண்டு, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் மனு கொடுக்கின்றனர். இந்த மனுக்களில் தனிப்பட்ட வேலைகள்தான் அதிகமாக இருக்கின்றனவாம்.
கோபத்தில் ஸ்டாலின்
சட்டசபை தேர்தலில் சொந்தக் காசைப் போட்டு செலவு செய்த தி.மு.க எம்.எல்.ஏக்கள் பலரும் தற்போது எடப்பாடி கோஷ்டியின் அரவணைப்பால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். திமுகவின் சீனியர் எம்.எல்.ஏக்களே அ.தி.மு.க அமைச்சர்களிடம் காட்டும் நெருக்கத்தால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின்.
எச்சரிக்கை
இதைப் பற்றி நேரடியாக அந்த எம்ல்.ஏக்களிடம் ஸ்டாலின் பேசும்போது, உங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் எனக்கு அதிகமான தகவல்கள் வருகின்றன. சட்டசபைக்கு வெளியில் நடப்பதைப் பற்றியும் ஆதாரத்துடன் தகவல்கள் வருகிறது. இனியும் நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்க வேண்டாம். தலைமைக்குக் கட்டுப்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என ஆவேசப்பட்டிருக்கிறார்.