பெரும்பான்மை பலத்தை இழக்கிறது எடப்பாடி அரசு? கைகொடுக்குமா ஓபிஎஸ் கோஷ்டி?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையின்படி 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழக்கலாம் என்ற சூழல் உள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் அதிமுகவின் 113 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பான்மை பலத்தை எடப்பாடி அரசு இழக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் அதிமுகவின் பலம் 136 ஆக இருந்தது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் சசிகலா அணிக்கு சபாநாயகருடன் சேர்த்து 123 எம்எல்ஏ-க்களும், ஓபிஎஸ் அணிக்கு 12 எம்எல்ஏ-க்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
எடப்பாடி அரசுக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடிக்கு 122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
சசிகலா, தினகரன் ஒதுக்கி வைப்பு
தற்போது அதிமுகவின் கோஷ்டிகள் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஓபிஎஸ்ஸின் நிபந்தனையின்பேரில் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
113 எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவு?
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் 113 எம்எல்ஏ-க்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏக்கள் வேண்டும்.
ஓபிஎஸ் கோஷ்டி ஆதரவு?
ஆகையால் தற்போதைய நிலையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் கோஷ்டியின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் அவரது தரப்பு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிப்பர். அப்படியே ஆதரவு அளித்தாலும் முதல்வராக இருப்பது எடப்பாடியா அல்லது ஓபிஎஸ்ஸா என்ற குழப்பமும் நீடிக்கும்.