அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. முதல்வர் எடப்பாடியார் ஈஸ்டர் வாழ்த்து
இயேசுபிரான் காட்டிய நல்வழிப்பாதையை பின்பற்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள "ஈஸ்டர் திருநாள்" வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலகை உய்விக்க மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரித்தும் எழுந்த சத்தியமாக, மரணம் இன்மையின் தத்துவமாக, கருணையே வடிவமாக திகழ்ந்த இயேசுபிரான், தன்னை சிலுவையில் அறைந்த பகைவர்களுக்கும் மனம் இரங்கி அவர்களின் செயலை மன்னித்தருளும்படி இறைவனிடம் வேண்டினார். பகைவர்களையும் நேசித்த இயேசுபிரான் அவர்கள், கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த இனிய நாளில், உலகில் அமைதி நிலவவும், மனிதநேயம் தழைத்திடவும், இயேசுபிரான் காட்டிய நல்வழிப்பாதையை பின்பற்றி அனைவரும் ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டியும் வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.