எடப்பாடியின் ஆட்சியை ஒரு வாரத்தில் கவிழ்ப்போம்.. டிடிவி தினகரன் மீண்டும் சபதம்
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி ஒரு வாரத்தில் கவிழ்க்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி ஒரு வாரத்தில் கவிழ்க்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் தரப்புக்கும் டிடிவி தினகரன் தரப்புக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் உறுதியாக உள்ளார்.
இதற்காக தனது ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பெருக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன், சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஒரு வாரத்தில் ஆட்சி கவிழும்
அப்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் கூறினார். ஒரு வாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்ப்போம் என்றும் அவர் கூறினார்.
எம்எல்ஏக்களை மிரட்டுகிறார்
எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதல்வராக்கிய எம்எல்ஏக்களையே மிரட்டி வருகிறார் என்றும் அவர் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி ஊருக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
எந்தக் கூட்டணியும் இல்லை
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் கூறினார். அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததில் திமுகவுடன் எந்த கூட்டணியும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தேர்ந்த நடிகர்கள்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தங்களின் கோரிக்கை என்று கூறிய டிடிவி தினகரன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதன் மூலம் ஸ்டாலின் தங்களுக்கு உதவி செய்திருப்பதாகவும் கூறினார். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் கைதேர்ந்த நடிகர்கள் என்றும் டிடிவி தினகரன் சாடினார்.