65 வயதுக்கு பிறகுதான் கமல்ஹாசனுக்கு ஞானோதயம் வந்துள்ளதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நடிகர் கமல்ஹாசன் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம்: நடிகர் கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகுதான் ஞானோதயம் வந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சேலத்தில் இன்று மாலை நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. நடிகர் கமல், எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா, முதலில் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அதிமுக ஆட்சி பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிந்துகொள்வார்.
விஸ்வரூபம் படம் வெளியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்தார். அதை எல்லாம் கமல்ஹாசன் மறந்து பேசுகிறார். 65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்துள்ளது எனக் கூறினார்.
மேலும் ஆட்சி தொடரக்கூடாது என்கிறார் கமல் என்றும் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக புதிய தலைமுறை அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு 62 வயது என்பது குறிப்பிடத்தக்கது.