ஆட்சியையும், கட்சியையும் தக்க வைத்துக் கொள்ள புதிய வியூகங்களை வகுக்கும் எடப்பாடி பழனிச்சாமி
தற்போது உள்ள ஆட்சியையும், கட்சியையும் தக்க வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய வியூகத்தை வகுக்கவுள்ளார்.
சென்னை: தினகரனின் ஆதரவாளர்களை சமாளிப்பது குறித்து அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. சசிகலா சிறைக்கு சென்றவுடன் அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற இரு அணிகளும் ஒன்றிணைவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதற்கு இடையூறாக உள்ள டிடிவி தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இரு அணிகளும் இணைவதற்கு ஆக.5 வரை தினகரனால் கெடு விதிக்கப்பட்டது.
கெடு முடிந்தது
இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கெடு முடிவடைந்ததால் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளையும் அவர் அறிவித்தார். இதை ஒரு சிலர் ஏற்றனர் மற்றும் சிலர் மறுத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் அதிமுக தலைமை கழகத்துக்கு வருவதாக டிடிவி தினகரன் அறிவித்தவுடன் அங்கு அவரை வர விடாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தான் துணை பொதுச் செயலாளர் என்பதால் கட்சி அலுவலகத்துக்குள் நுழைவதை யாரும் தடுக்க முடியாது என்று தினகரன் கொக்கரித்துள்ளார்.
ஆட்சிக்கு பங்கம் ஏற்படாது
இந்த நிலையில் கட்சி பதவி போகும், ஆட்சி போகும் என்று அறைகூவல் விடுத்து வரும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களால் ஆட்சிக்கு எந்த வித பங்கமும் வராது என்பது எடப்பாடி நன்றாக தெரியும். ஏனெனில் பதவியை தினகரன் தரப்பு எம்எல்ஏ-க்களால் தூக்கி எறியமுடியாது. அதே சமயம் கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வசம் இருப்பதால், தினகரன் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே, கட்சியிலும், ஆட்சியிலும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களை சமாளிக்கும் வகையில் புதிய வியூகம் வகுப்பது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தினகரன் சம்மந்தமாக ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.