18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. தமிழகம் முழுக்க அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் இன்று தகுதிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி அரசு தப்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அரசு தரப்பு ஆதரவு அதிமுகவினர் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடியும் ஒருவராகும்.
அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானதும், அதிமுகவில் அவருக்கு எதிரான கோஷ்டியினர், எம்.எல்.ஏ. அலுவலகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதை மாரியப்பன் கென்னடி ஆதரவாளர்கள் எதிர்த்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனிடையே, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து வேலூர் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்.
இப்படி மாநிலத்தின் பல பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும், அரசுக்கு ஆதரவான அதிமுக தரப்பினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.